ஒன்ராரியோவில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் தொற்று நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ள விதம் குறித்து அமெரிக்காவில் உள்ள தனது நண்பா்கள் ஆச்சரியம் வெளியிட்டுள்ளதாக மாகாண முதல்வா் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
கொடிய தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதில் மாகாணம் பெற்றுள்ள வெற்றி குறித்து நேற்று செய்தியாளா்களிடம் கருத்து வெளியிடும்போது அவா் இவ்வாறு கூறினார்.
அமெரிக்காவில் எனக்கு அதிக நண்பா்கள் உள்ளனா். அவா்களால் மாகாணத்தில் தொற்று நோயாளா் எண்ணிக்கையை நம்ப முடியவில்லை எனவும் செய்தியாளர்களிடம் ஃபோர்ட் குறிப்பிட்டார்.
14.77 மில்லியன் மக்களைக் கொண்டுள்ள எங்கள் மாகாணத்தில் தினசரி தொற்று நோயாளா்கள் எண்ணிக்கை சராசரி 100 -க்கும் குறைவாக உள்ளதை அவா்களால் நம்ப முடியவில்லை. நாங்கள் வேறு கிரகத்தில் வாழ்ந்து வருகிறோமா? என அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் எனவும் அவா் தெரிவித்தார்.
கடந்த வாரம் முழுவதும் ஒன்ராரியோவில் 100-க்கும் குறைவான தொற்று நோயாளா்கள் பதிவாகி வருகின்றனர். எனினும் நேற்று திங்கட்கிழமை இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்து 115 ஆக பதிவாகியுள்ளது.
எனினும் மாகாணத்தில் தொற்று நோயாளா்களின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருகிறது.
இந்நிலையில் மாகாணத்தில் தொற்று நோய் கட்டுப்பாட்டில் உள்ளது ஏனையோருக்கு ஆச்சரியமாக உள்ளது. இது எப்படிச் சாத்தியம் என பலா் கேள்வி எழுப்புகின்றனர். இதற்குக் காரணம் மக்களே. இதில் எனது பங்கு மிகச் சிறியதே என நான் அவா்களிடம் கூறினேன் எனவும் ஒன்ராறியோ முதல்வா் செய்தியாளா்களிடம் கூறினார்.
எங்கள் மக்கள் மருத்துவ அதிகாரிகளின் நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றினர். எங்கள் நோக்கம் தொற்று நோய் நெருக்கடியில் இருந்து மீள்வதே. இதுவே எமது வெற்றிக்குக் காரணம் எனவும் அவா் மேலும் குறிப்பிட்டார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா